நாம் இன்று வெற்றி மீது வெற்றி கொண்டு தேசத்தை பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலை தூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையின் விபரம் வருமாறு, உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதையில் வழி நடத்திச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு உழைக்கும் மக்கள் வழங்கி வரும் பலத்தை மறந்து விட முடியாது. ஒரு பக்கத்தில் முழு உலகையும் அச்சத்துக்குள்ளாக்கி வருவதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு நாம் அச்சமின்றி முகங் கொடுத்தோம். அவ்வாறு முகங் கொடுத்து இன்று நாம் சுதந்திரமான ஒரு வருடத்துக்குள் காலடி வைத்துள்ளோம். அதேபோல் உலக பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் வளங்களைப் பாதுகாத்து மக்கள் வாழ்க்கையை சுபீட்சமடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிகள் சகலவற்றிலும் பங்குதாரராவதற்கு இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் பொறுமையைக் கையாண்டிருப்பது உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் கௌரவத்துக்கு பாத்திரமாகலாம் என நம்புகிறேன்.






