கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீடுகளிலும் கடைகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள மலையக சிறுவர்களை அடையாளங்கண்டு அவர்களை சமூகமயப்படுத்தும் பாரிய திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்தார். வறுமை காரணமாக பெருமளவு மலையகச் சிறுவர்கள் கொழும்பிலும் ஏனைய பகுதிகளலும் வேலைக்கமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு ஆளாகி வருவதோடு சித்திரவதை செய்யப்பட்டும் மோசமாக நடாத்தப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன் கொழும்பிலுள்ள வீடுகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த மலையகச் சிறுவர்கள் மற்றும் யுவதிகள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களின் கொலை தொடர்பாக அதிகாரசபை விசாரணைகளை நடாத்தி- வருவதாகவும் ஜகத் வெல்லவத்த கூறினார்.
மலையகத்தில் இருந்து கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களின் விபரங்களைத் திரட்டுவதற்காக கணிப்பீடொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்காக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சுடனும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சுடனும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களை அடையாளங்கண்டு சமூகமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறிய ஜகத் வெல்லவத்த உரிய முறையில் கல்வி கற்க அவர்களுக்கு ஒழுங்ககள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் வறுமை காரணமாக வீட்டுவேலைகளில் அமர்த்தப்படுவது மலையகத்தில் பெரும் சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. மலையகச் சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி கூடுதல் கரிசனை காட்டி வருகிறார்.






